எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு சிறந்த தூய்மை வளாக விருது மத்திய மந்திரி வழங்கினார்


எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு சிறந்த தூய்மை வளாக விருது மத்திய மந்திரி வழங்கினார்
x
தினத்தந்தி 7 Sep 2021 4:00 AM GMT (Updated: 7 Sep 2021 4:00 AM GMT)

சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு சிறந்த தூய்மை வளாக விருதை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் வழங்கினார்.

சென்னை,

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகங்களில் தூய்மையை பராமரித்து வரும் சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்து அவர்களுக்கு சிறந்த தூய்மை வளாக விருதை வழங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு மூலம் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகம் நாட்டில் தூய்மையான மற்றும் சிறந்த முதன்மையான வளாகமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானிடம் இருந்து அதற்கான விருதை எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் சி.முத்தமிழ் செல்வன் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே, துணைத்தலைவர் பூனியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நல்லாசிரியர் விருது

அதேபோல, ஆசிரியர் தினவிழாவையொட்டி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் நல்லாசிரியர் விருதான விஸ்வேஸ்ராயா விருது எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கணினி பள்ளியின் நெட்வொர்க் மற்றும் கம்யூனிகேஷன் துறை உதவி பேராசிரியர் பி.சுப்ரஜாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று அபாயம் நிலவி வரும் நிலையில், மருத்துவ சேவையில் உள்ள தடைகளை களைவதற்கான தீர்வை உருவாக்கிய பேராசிரியர் சந்தீப் கே.லகிரா தலைமையிலான மாணவர்கள் அடங்கிய குழுவுக்கு, தேசிய அளவில் 2-வது இடம் கிடைத்து இருக்கிறது. அதற்கான விருதும் எஸ்.ஆர்.எம். நிறுவனத்துக்கு கிடைத்து உள்ளது.

Next Story