விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு


விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு
x
தினத்தந்தி 7 Sep 2021 6:21 AM GMT (Updated: 7 Sep 2021 6:21 AM GMT)

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்வும் அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம், இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு இந்து மக்கள் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில், திரளான இந்து மக்கள் கட்சியினர் கையில் விநாயகர் சிலையுடன் நேற்று வந்தனர்.

இதையடுத்து, அவர்கள் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து ஒரு மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது;-

வருகின்ற 10-ந்தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சாதி, பேதமில்லாமல் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவது வழக்கம்.

ஊர்வலம் செல்ல அனுமதி

இந்த நிலையில் தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் அனைத்து தரப்பினரும் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சிரமமின்றி கொண்டாடும் வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story