300 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை


300 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 7 Sep 2021 5:34 PM GMT (Updated: 7 Sep 2021 5:34 PM GMT)

பொள்ளாச்சி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரவல் குறைந்ததால் தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிகளில் 7 மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. 

கிருமி நாசினி தெளிப்பு 

மாணவ-மாணவிகளின் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் தொற்று உறுதி செய்யப் பட்ட பள்ளிகளில் மீண்டும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவிகள் 163 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

300 மாணவர்கள் 

இதுபோன்று தனியார் பள்ளியில் 30 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 300 மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 

பரிசோதனை முடிவுகளுக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். 

காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story