உத்திரமேரூரில் மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; 2 பேர் பலி


உத்திரமேரூரில் மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 Sep 2021 2:12 PM GMT (Updated: 11 Sep 2021 2:12 PM GMT)

உத்திரமேரூரில் மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கருணீகர் தெருவை சேர்ந்தவர் கமலகண்ணன் (வயது 27). மோட்டார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்பாஸ் என்கிற முனியன் (25). கடந்த 5-ந்தேதி உத்திரமேரூர் அடுத்த பெருங்கோழி கிராமத்தில் மீன் வாங்கி கொண்டு முனியன் மற்றும் கமலகண்ணன் மோட்டார் சைக்கிளில் உத்திரமேரூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். உத்திரமேரூர்-செங்கல்பட்டு சாலையில் நெல்லூர் கூட்ரோடு அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

இதில் கமலகண்ணன், அப்பாஸ் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக கமலகண்ணனை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் முனியனை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முனியன் நேற்று முன்தினம் பலியானார். நேற்று அதிகாலை கமலகண்ணன் பலியானார்.

இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story