தொழிலாளியை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி கைது


தொழிலாளியை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி கைது
x
தினத்தந்தி 11 Sep 2021 4:45 PM GMT (Updated: 11 Sep 2021 4:45 PM GMT)

தொழிலாளியை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி கைது

வடவள்ளி

தனது வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து, விற்று மது குடித்ததால் ஆத்திரத்தில் கட்டிட தொழிலாளியை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

கட்டிட தொழிலாளி

கோவையை அடுத்த வடவள்ளி கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது59). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஜீவரத்தினம். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பாலசுப்பிரமணி மது குடித்து விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜீவரத்தினம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் வீர வீரகேரளம் பகுதியில் வசித்து வருகிறார். 

வடவள்ளியில் உள்ள வீட்டில் பாலசுப்பிரமணி மட்டும் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அவரது மகள்கள் அல்லது மகன் தினமும் சென்று சாப்பாடு கொடுப்பது வழக்கம்.

விசாரணை

நேற்று முன்தினம்  பாலசுப்பிரமணிக்கு சாப்பாடு கொடுக்க அவரு டைய மகன் சென்றார். அங்கு வீட்டிற்குள் பாலசுப்பிரமணி இறந்து கிடந்தார். இதை பார்த்து மகன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 


அப்போது  பாலசுப்பிரமணியின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

தம்பி கைது

இதில், பாலசுப்பிரமணிக்கும், அவருடைய தம்பி கிருஷ்ணகுமாருக் கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. எனவே அவருடைய உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

இதையடுத்து தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரை போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், தனது அண்ணன் பாலசுப்பிரமணி யை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான கிருஷ்ணகுமார் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது

எனது அண்ணன் பாலசுப்பிரமணிக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். 

இதனால் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னிடம் தகராறு செய்து வந்தார். இதன் காரணமாக நான் வடவள்ளி வீட்டை காலி செய்து விட்டு லாலிரோடு பகுதிக்கு சென்று விட்டேன். 

மரக்கட்டையால் அடித்து கொலை

என்னுடைய பழைய வீட்டில் இருந்த டிரம் மற்றும் மோட்டார் ஆகிய பொருட்களை பாலசுப்பிரமணி எடுத்து விற்று மது குடித்து வந்தார். இதையறிந்த நான் அவரை கண்டித்தேன். 

ஆனால் அதை கேட்காமல் அவர், தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து விற்று குடித்து வந்தார்.

இந்த நிலையில் எனது மகளுக்கு திருமணம் நடைபெற்ற போது மது குடித்து விட்டு வந்து பாலசுப்பிரமணி மண்டபத்தில் தகராறு செய்தார். 

இதனால் அவர் மீது வெறுப்படைந்த நான் நேற்று முன்தினம் எனது நண்பர் ஜவகர்பிரகாசுடன் எனது அண்ணன் பாலசுப்பிரமணியின் வீட்டிற்கு வந்து அவரை கண்டித்தேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் ஆத்திரம் அடைந்த நான் அங்கிருந்த கட்டையை எடுத்து தலையில் அடித்ததில் பாலசுப்பிரமணி இறந்தார். இதனால் நான் அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர். 

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story