காட்டு யானைகள் முகாம்


காட்டு யானைகள் முகாம்
x
தினத்தந்தி 11 Sep 2021 6:23 PM GMT (Updated: 11 Sep 2021 6:23 PM GMT)

வால்பாறை பாறைமேடு பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.


வால்பாறை


வால்பாறை பாறைமேடு பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். 


காட்டு யானைகள் முகாம்


வால்பாறை பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் தற்போது குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மேலும்  இந்த ஆண்டு தேவைக்கு அதிகமான அளவில் மழை பெய்து வருவதால் கேரள வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் வால்பாறை வனப்பகுதிகளுக்கு  இடம்பெயர்ந்து வருகின்றன. 

இந்த நிலையில் கடந்த ஒருமாதமாக வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை பாறைமேடு பகுதியில் 2 ஆண் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் பாறைமேடு பகுதியிலேயே சுற்றித்திரிகிறது. 


வனத்துறையினர் அறிவுறுத்தல்


குறிப்பாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் ரொட்டிக்கடை பகுதியில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் பழைய வால்பாறை பகுதி செல்லும் ரோட்டுக்கு வந்து செல்கிறது. எனவே பாறைமேடு மற்றும் லோயர்பாரளை எஸ்டேட் பகுதிகளை சேர்ந்த எஸ்டேட் பகுதி மக்கள் பாறைமேடு பகுதிக்கு காய்ந்த விறகுகள் எடுப்பதற்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள். 

குறிப்பாக  லோயர்பாரளை எஸ்டேட் தொழிலாளர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் பணிக்கு சென்று வரும் போது கவனமாக சென்று வரவேண்டும் என்றும் வால்பாறை வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


கோரிக்கை


மேலும் எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களை தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு அனுப்புவதற்கு முன் தேயிலை தோட்ட பகுதியை சுற்றி பார்த்து விட்டு வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்த பின்னர் தொழிலாளர்களை பணிக்கு அனுமதிக்க வேண்டும.


 தேயிலை தோட்ட பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக தெரியவந்தால் அது குறித்து வனத்துறைக்கு தெரிவித்து விட்டு தொழிலாளர்களை வேறு பகுதிகளுக்கு பணிக்கு அனுப்ப வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வால்பாறை பாறைமேடு பகுதியில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளை உயர்ச்சேதம் ஏற்படும் முன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 



Next Story