தனியார் கம்பெனியில் தீ விபத்து 10 மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்


தனியார் கம்பெனியில் தீ விபத்து 10 மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 12 Sep 2021 11:12 AM GMT (Updated: 12 Sep 2021 11:12 AM GMT)

மதுரவாயல் அருகே தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்சார மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.

பூந்தமல்லி,

மதுரவாயல் அடுத்த வானகரம், முஸ்தபா தெருவில் தனியாருக்கு சொந்தமான கம்பெனி ஒன்று உள்ளது. இங்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் பழுது பார்ப்பது மற்றும் சோலார் பேனல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை இந்த கம்பெனியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கம்பெனி முழுவதும் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு, பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மோட்டார்சைக்கிள்கள் நாசம்

கம்பெனியின் ஜன்னல் கதவுகளை உடைத்தும், சிறிய செட்டரை உடைத்தும் அதன் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கம்பெனிக்குள் இருந்த உற்பத்தி பொருட்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மின்சார மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த மற்ற கம்பெனிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story