துணிக்கடை உரிமையாளர் வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை


துணிக்கடை உரிமையாளர் வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 13 Sep 2021 5:25 PM GMT (Updated: 13 Sep 2021 5:25 PM GMT)

கோவை அருகே உள்ள உடையாம்பாளையத்தில் துணிக்கடை உரிமை யாளர் வீட்டில் 51 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமி களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை

கோவை அருகே உள்ள உடையாம்பாளையத்தில் துணிக்கடை உரிமை யாளர் வீட்டில் 51 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமி களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

துணிக்கடை உரிமையாளர் 

கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பார்க்டவுன் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 42). இவருடைய மனைவி பிரியா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அருணாச்சலம் கணபதி சத்தி ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார். 

கொரோனா பரவல் காரணமாக கோவையில் சனி, ஞாயிற்றுக்கிழமை மளிகை, காய்கறி கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் அருணாச்சலம் கடந்த வெள்ளிக்கிழமை கடை மற்றும் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வால்பாறை சென்றார். 

51 பவுன் நகை கொள்ளை 

பின்னர் அவர் வீடு திரும்பினார். அப் போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது குடும்பத்தினருடன் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த 2 பீரோக் கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. 

அதில் இருந்த 51 பவுன் நகைகளை காணவில்லை. அவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.17 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

போலீசார் விசாரணை 

இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். 

அத்துடன் கைவிரல் ரேகை நிபுணர் குழுவும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அவர்கள் அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:- 

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

கொள்ளை நடந்த துணிக்கடை உரிமையாளர் வீடு இருக்கும் பகுதியில் கட்டிட வேலை நடந்து வருகிறது. எனவே அங்கு வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அருணாச்சலம் வீட்டின் அருகே உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதில் உள்ள காட்சிகளை வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறோம். விரைவில் அவர்களை பிடித்து விடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story