கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாததால் வாழ்வாதாரம் பாதிப்பு


கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாததால் வாழ்வாதாரம் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2021 7:25 PM GMT (Updated: 13 Sep 2021 7:25 PM GMT)

கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாததால் வாழ்வாதாரம் பாதிப்பு

பொள்ளாச்சி

வனப்பகுதியில் வழிப்பாதை அடைக்கப்பட்டதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சப்-கலெக்டரிடம் மலைவாழ் மக்கள் மனு அளித்துள்ளனர்.

ஆடு, மாடு மேய்ச்சல்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். அப்போது உடுமலை தாலுகா மாவடப்பு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மாவடப்பு குடியிருப்பில் மலைவாழ் மக்கள் சுமார் 200 பேர் குடியிருந்து வருகின்றோம். பாரம்பரியமாக விவசாயம் செய்தல், ஆடு, மாடுகள் மேய்த்து குடும்பத்தை பராமரித்து வருகிறோம். 

கடந்த மே மாதம் 15-ந் தேதி பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லார் காலனி அருகே மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற போது, வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும் மேய்ச்சலுக்கு செல்ல கூடாது என்று கூறி, கற்களை வைத்து வழித்தடத்தை அடைத்து விட்டனர். 

இதனால் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மலைவாழ் பெண்களை பிரசவத்திற்கு உடனடியாக வாகனங்கள் மூலம் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பாரம்பரிய விவசாய தொழில், ஆடு, மாடு மேய்த்தல் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இடத்தை ஒப்படைக்க வேண்டும்

பொள்ளாச்சி ஜோதி நகர் டி காலனி குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜோதி நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் 64.05 சென்ட் இடம் நூலகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடம் தற்போது நகராட்சிக்கு இலவசமாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

 இதற்கிடையில் அந்த இடத்தை ஆக்கிரமித்து பொது கழிப்பிடமும், கோவிலும் கட்டப்பட்டு உள்ளது. எனவே வேலி அமைத்து இடத்தை பாதுகாக்க வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டி பின்புறம் சுமார் 35 சென்ட் இடம் போலீஸ் நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

ஆனால் அந்த இடம் போலீசார் வசம் ஒப்படைக்காமல், பொள்ளாச்சி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் வசம் உள்ளது. இதேபோன்று தீயணைப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்த சுமார் 60 சென்ட் இடமும், தபால் நிலையம், தொலைபேசி நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்த ஒரு ஏக்கர் நிலமும், ஒப்படைக்காமல் உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவில் பொது உபயோகத்திற்கு விடப்பட்ட பகுதிகளை வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்த கூடாது என்று சட்ட விதி உள்ளது. ஆனால் தொடர்படைய துறை வசம் ஒப்படைக்காமல், பொது உபயோக பகுதிகளுக்கு வழிகாட்டி மதிப்பின்படி விலை கொடுக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கத்தினர் செயல்படுகின்றனர். 

எனவே பொது உபயோக பகுதிகளை அந்தந்த துறை வசம் ஒப்படைப்பு செய்ய கூட்டுறவு சங்கத்திற்கு உத்தரவிட வேண்டும். சங்கத்தினர் ஒப்படைப்பு செய்யவில்லை என்றால் உள்நுழைவு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story