சிறுவாணி அணை நீர்மட்டம் 40 அடியாக உயர்வு


சிறுவாணி அணை நீர்மட்டம் 40 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 14 Sep 2021 2:12 PM GMT (Updated: 14 Sep 2021 2:12 PM GMT)

சிறுவாணி அணை நீர்மட்டம் 40 அடியாக உயர்வு

கோவை

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.6 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுவாணி அணை


கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கும், வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. 

50 அடி உயரமுள்ள இந்த அணை 50 அடியில் பாதுகாப்பு கருதி 45 அடி வரை மட்டுமே குடிநீர் தேக்க கேரள அதிகாரிகள் அனுமதிக் கின்றனர். 

இந்த நிலையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை நன்றாக பெய்து வருகிறது. 

இதனால் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கோவை நொய்யல் ஆற்றிலும் சித்திரைச்சாவடி தடுப்பணை யை தாண்டி ஆற்றுநீர் வந்து கொண்டு உள்ளது.

 இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுவாணி அணையின் நீர் மட்டம் 35 அடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது அதிகளவு தண்ணீர் வருவதால் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு வராது

நேற்றைய நிலவரப்படி அணையில் நீர்மட்டம் 40.6 அடியாக உள்ளது. மழை இன்னும் சில நாட்கள் தீவிரமாக பெய்தால் அணையின் நீர்மட்டம் விரைவில் 45 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. 

இதனால் சில மாதங்களுக்கு கோவை மாநகராட்சிக்கு பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.
தற்போது அணையில் இருந்து நாள்தோறும் 101 எம்.எல்.டி. தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. 

இதில் கோவை மாநகராட்சி பகுதி மக்களின் தேவைக்காக மட்டும் 97.8 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்) :- சிங்கோனா- 95, சின்னக்கல்லார்-94, வால்பாறை பி.ஏ.பி.-74, வால்பாறை தாலுகா-71, சோலையாறு-102, பொள்ளாச்சி-15.


Next Story