தலை துண்டித்து வாலிபர் கொலை - 10 பேரிடம் போலீசார் விசாரணை


தலை துண்டித்து வாலிபர் கொலை - 10 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Sep 2021 12:35 AM GMT (Updated: 17 Sep 2021 12:35 AM GMT)

தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள எருமையூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 23), இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து வெற்றிவேலின் தாயார் சாமுண்டீஸ்வரி வெற்றிவேலை காணவில்லை என்று சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன அன்று இரவு தர்காஸ் தேவாலயம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் வெற்றிவேலின் தலை மட்டும் இருப்பதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தலையை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். துண்டிக்கப்பட்ட உடலை போலீசார் நடுவீரப்பட்டு தர்காஸ் பகுதி அருகே ஏரிக்கரையோரம் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். இந்த கொலை குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெற்றிவேல் கொலை வழக்கு தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story