தொடர்ந்து 102 அடியாக நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்


தொடர்ந்து 102 அடியாக நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2021 11:36 PM GMT (Updated: 17 Sep 2021 11:36 PM GMT)

பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடிக்கிறது.

பவானிசாகர்
பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடிக்கிறது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி என கணக்கிடப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலின் மூலம் திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதேபோல் பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை ஆகும்.
தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக கடந்த மாதம் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 20-ந் தேதி ஈரோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் வாய்க்கால் சீரமைப்பு சரிசெய்யப்பட்டதும் கடந்த 13-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த 15-ந் தேதி காலை 6 மணிமுதல் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
102 அடியாக நீடிப்பு
பவானிசாகர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,526 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம்  102 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசனத்துக்கு வினாடிக்கு 489 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 511 கன அடி தண்ணீரும் என மொத்தம் பவானி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 22 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாகவே நீடிக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசனத்துக்கு வினாடிக்கு 477 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 1,713 கன அடி தண்ணீரும் என மொத்தம் பவானி ஆற்றில் வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story