ஊருணிக்குள் கார் பாய்ந்து 2 பேர் பலி
அலங்காநல்லூர் ஊருணிக்குள் கார் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் ஊருணிக்குள் கார் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முல்லைபெரியாறு கால்வாய்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டியில் முல்லை பெரியாறு கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் தற்போது தண்ணீர் செல்வதால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து குளிக்கின்றனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் மதுரை செல்லூர் பகுதியில் இருந்து வந்தவர்கள் குளித்துவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பினர். அச்சம்பட்டி கூம்பூர் குண்டு ஊருணி பகுதியில் கார் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஊருணிக்குள் பாய்ந்தது.
இதில் கார் தண்ணீரில் மூழ்கி செல்லூரை சேர்ந்த அரவிந்த் குமார் (வயது27), அதே பகுதியை சேர்ந்த சித்திக்ராஜா (27) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அதே காரில் வந்த வேல்பாண்டியன் (27), வீரபாண்டி (27), முத்துப்பாண்டி (25) ஆகியோரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கார் மீட்பு
தகவல் அறிந்து வந்த அலங்காநல்லூர் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, எந்திரத்தின் உதவியுடன் காரை மீட்டனர். சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Related Tags :
Next Story