பூந்தமல்லி அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார், கோவிலுக்குள் புகுந்தது


பூந்தமல்லி அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார், கோவிலுக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 20 Sep 2021 12:44 PM GMT (Updated: 20 Sep 2021 12:44 PM GMT)

பூந்தமல்லி அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார், சாலையோரம் உள்ள கோவிலுக்குள் புகுந்தது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

கோவிலுக்குள் புகுந்த கார்
திருவள்ளூரைச் சேர்ந்தவர் பாலகுமார் (வயது 38). இவர், நேற்று காலை பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கரையான்சாவடி டிரங்க் சாலையில் சென்றபோது திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது.இதில் பாலகுமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி, சாலையோரம் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளிவிட்டு சாலையோரம் உள்ள சிறிய கோவிலுக்குள் புகுந்தது.

2 பேர் காயம்
இதில் கோவிலுக்குள் படுத்திருந்த பூசாரி ராஜேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த பாலகுமார், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர், காயம் அடைந்த பூசாரி ராஜேசை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கார் மோதியதில் சிமெண்டு சீட்டால் அமைக்கப்பட்டு இருந்த கோவில், மோட்டார்சைக்கிள் மற்றும் குடியிருப்புகள் கட்ட வாடகைக்கு விடப்படும் ஏணி வைத்துள்ள கடை ஆகியவை சேதமடைந்தது. காரின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், கோவிலுக்குள் புகுந்து நின்ற காரை அப்புறப்படுத்தினர். கார் தாறுமாறாக ஓடியபோது அந்த வழியாக வேறு யாரும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Next Story