மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு; 2 பெண்கள் கைது


மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு; 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 23 Sep 2021 8:54 PM GMT (Updated: 23 Sep 2021 8:54 PM GMT)

மதுரையில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை பறித்த 2 பெண்களை கைது செய்தனர்

மதுரை
மதுரையில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை பறித்த 2 பெண்களை கைது செய்தனர்.
நகை பறிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சரோஜா(வயது 60). இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் உறவினர் ஒருவரை பார்க்க வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து பஸ் ஏறுவதற்காக அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வடமாநில பெண்கள் தோற்றத்துடன் 4 பேர் அங்கு வந்தனர். 
அவர்கள் திடீரென்று சரோஜாவை தாக்கி, அவரிடமிருந்து 3 பவுன் நகையை பறித்து கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்குள் சென்று விட்டனர். அப்போது மூதாட்டி சத்தம் போட அங்கிருந்து ஆட்டோ டிரைவர்கள் விசாரித்தனர். 
2 பேர் கைது
அந்த நேரத்தில் அந்த கும்பலை சேர்ந்த 2 பெண்கள் மட்டும் சுடிதார் உடையுடன் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்ததை ஆட்டோ டிரைவர்கள் பார்த்து விட்டனர். உடனே அவர்கள் விரைந்து செயல்பட்டு அந்த 2 பெண்களை பிடித்து அண்ணாநகர் போலீசில் ஒப்படைத்தனர். 
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்கள் தான் நகையை திருடியதும், அவர்கள் 2 பேரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்களுடன் வந்த மற்ற 2 பெண்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story