புரசைவாக்கத்தில் மிக்சி, கிரைண்டர் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து


புரசைவாக்கத்தில் மிக்சி, கிரைண்டர் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 26 Sep 2021 11:09 AM GMT (Updated: 26 Sep 2021 11:09 AM GMT)

புரசைவாக்கத்தில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி பழுது நீக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது.

சென்னை,

சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையை சேர்ந்தவர் மணி (வயது 50). இவர், வெள்ளாளர் தெருவில் ஒரு வணிக வளாகத்தின் முதல் மாடியில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் வழக்கம் போல மணி, கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த மின்சாதான பொருட்கள் திடீரென எரிந்து கரும்புகை வெளியேறியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணி, தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் தீ அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளுக்கு பரவி, தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பேரி, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடையில் எரிந்த தீயை சுமார் ஒரு மணிநேரம் போராடி அணைத்தனர்.

மின்சாதன பொருட்கள் நாசம்

எனினும் தீ விபத்தில் கடையின் உள்ளே இருந்த பழைய மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

தீ விபத்து குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story