காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 27 Sep 2021 11:29 AM GMT (Updated: 27 Sep 2021 11:29 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந் தேதி 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர், ஒன்றியக்குழு கவுன்சிலர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், சிற்றூராட்சி வார்டு கவுன்சிலர்கள் என 4 பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வாக்காளர்கள் வாக்களிக்க சின்னங்களும் ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவடைந்தது.

வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி

இந்நிலையில் காஞ்சீபுரம் கூட்டுறவு அச்சகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் சரிபார்க்கப்பட்டு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியை கூட்டுறவு அச்சக பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டுறவு அச்சகத்தில் நடைபெற்றுவரும் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story