குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு


குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 27 Sep 2021 3:43 PM GMT (Updated: 27 Sep 2021 3:43 PM GMT)

பெருந்துறை அருகே குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பெருந்துறை அருகே குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குடிநீர் வசதி
பெருந்துறை அருகே உள்ள பெரியமடத்துப்பாளையம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
எங்கள் பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அங்கு ஆழ்துளை கிணறு மூலமாக மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு எங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. சில நாட்களாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது காரணமாக தண்ணீர் சரியாக வருவதில்லை. இதனால் ஒரு வீட்டுக்கு 2 குடங்கள் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் எங்கள் பகுதிக்கு பஸ் வசதி கிடையாது. ஏற்கனவே வந்து சென்ற மினிபஸ்சும் தற்போது வருவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. மேலும் சாலையும் மோசமாக உள்ளது. எனவே பஸ் வசதி, சாலை, மின் விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
தூய்மை பணியாளர்கள்
அந்தியூர் தாலுகா மைக்கேல்பாளையம் ஊராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக மைக்கேல்பாளையம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரத்து 600 ஊதியமாக வழங்கப்படுகிறது. விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. எங்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். இந்த ஊராட்சியில் 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறையே சம்பளம் வழங்குகிறார்கள். இதனால் குடும்ப செலவுக்கு சிரமமாக உள்ளது. எனவே ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மோசடி
மக்கள் நீதி மய்யம் வடகிழக்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் கலிங்கியம் ஊராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பல்வேறு முறைகேடு நடந்து உள்ளது. குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல், சாக்கடை சுத்தம் செய்தல், தெருவிளக்கு, மின் மோட்டார், குடிநீர் குழாய் பராமரிப்பு போன்ற அடிப்படை வேலைகளில் நிதி முறைகேடு நடந்து உள்ளது. ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த செலவினம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி பார்க்கும்போது முறையற்ற குடிநீர் வினியோகம், தேவையற்ற பொய் கணக்குகள் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்து உள்ளது. 100 நாட்கள் வேலை திட்ட வருகை பதிவேட்டில் அரசியல் கட்சியினர், தெரிந்தவர்களின் பெயரை சேர்த்து சம்பளம் வழங்கி உள்ளனர். எனவே இந்த மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story