குன்றத்தூர் ஒன்றியத்தில் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்


குன்றத்தூர் ஒன்றியத்தில் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 28 Sep 2021 11:09 AM GMT (Updated: 28 Sep 2021 11:09 AM GMT)

ஊராட்சி தேர்தலையொட்டி குன்றத்தூர் ஒன்றியத்தில் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்ய குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மவுலிவாக்கம், பாய்கடை சந்திப்பு பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திறந்தவெளி வேனில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- பல வருடமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தி விட்டார்கள். இத்தனை ஆண்டு காலமாக தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளுக்கு வாக்களித்து வந்தீர்கள், முதல் முறையாக உங்கள் பகுதிகளில் இருந்து உங்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு நபரை தேர்ந்தெடுங்கள்.

ஆய்வு

உள்ளாட்சி தேர்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எங்களிடம் உள்ள ஆட்கள் ரவுடிகள் கிடையாது. எங்களிடம் நேர்மையான நபர்கள் உண்டு. அவர்கள் கொடுக்கும் அடி தாங்க முடியாத அடியாக இருக்கும் ஏனென்றால் அது மக்களின் அடி என பேசினார்.

பின்னர் அங்கிருந்து பரணிபுத்தூர் சென்ற அவர், பராமரிப்பு இல்லாமல் இருக்கும் சுடுகாடு மற்றும் மலை போல் குவிந்து இருக்கும் குப்பைமேடு பகுதியை வேனில் இருந்தபடியே ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, படப்பை பஸ் நிறுத்தம் அருகே திறந்த வேனில் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, எம்.பி., எம்.எல்.ஏ., மந்திரி ஆகிய பதவிகள் இருக்கும்போது இந்த சிறிய பதவிகளுக்கு ஏன் அடித்து கொள்கிறார்கள் தெரியுமா?.

போக்குவரத்து நெரிசல்

அவர்கள் நிதியை வடித்து எடுக்கும் வடிகால் ஊராட்சிகள் ஆன இங்கு தான் உள்ளது. இங்கிருந்துதான் சொட்டு சொட்டாக சேர்த்து கஜானாவை நிரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கமல் பேசிக் கொண்டிருந்தபோது பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் ரசிகர்கள் என ஏராளமானோர் கூடியதால் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தது.

இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். பின்னர் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து சீரமைத்தனர்.

Next Story