காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sep 2021 12:36 PM GMT (Updated: 28 Sep 2021 12:36 PM GMT)

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சீபுரம்,

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 10 மாதங்களாக போராடும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து அகில இந்திய விவசாய அமைப்புகள், அழைப்பு விடுத்திருந்த பாரத் பந்த்தை ஒட்டி காஞ்சீபுரம் தேரடிப்பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகி நேரு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 10 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தை ஒட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தேரடி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டத்தினால் நகரின் முக்கிய பகுதியான காந்தி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சோழிங்கநல்லூர்

இதேபோல் தேரடி பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மற்றும் மின்சார சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறக்கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி நேற்று செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை போலீசார் தடுத்தால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒருபகுதியாக சோழிங்கநல்லூர் சிக்னலில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. செம்மஞ்சேரி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கூடுவாஞ்சேரி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பல்வேறு தொழிற்சங்கத்தின் சார்பில் நேற்று கூடுவாஞ்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் திடீரென மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைப் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த 60 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story