பாதையை மறித்து அமைத்த வேலியை அகற்றக்கோரிய வழக்கில் நோட்டீசு


பாதையை மறித்து அமைத்த வேலியை அகற்றக்கோரிய வழக்கில் நோட்டீசு
x
தினத்தந்தி 1 Oct 2021 1:15 AM IST (Updated: 1 Oct 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

பாதையை மறித்து அமைத்த வேலியை அகற்றக்கோரிய வழக்கில் நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 
மதுரை வள்ளுவர்காலனி வ.உ.சி.நகரை சேர்ந்த பகவதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:- மதுரை வள்ளுவர் காலனி வ.உ.சி. நகரில் வீடு கட்டி 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் வீடு குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது. 20 அடி அகலம் உள்ள இந்த தெரு தெற்கு-வடக்கு பகுதியில் உள்ள பிரதான 2 தெருக்களை இணைப்பதாக உள்ளது. இந்தநிலையில் எங்கள் வீட்டின் அருகில் உள்ள பிளாட் எண் 20, 27 ஆகிய மனைகளுக்கு இடையில் குறுக்குத்தெரு செல்கிறது.
ஆனால் அப்பகுதியில் காண்டிராக்ட் பணியில் ஈடுபடும் தனிநபர் தெருவின் ஒரு பகுதியை வேலி அமைத்து தடுத்துவிட்டார். இதனால் இந்த பகுதியில் வசிப்பவர்கள் தெருவின் ஒருபகுதியில் மட்டுமே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஏற்கனவே இந்த நடவடிக்கைக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதன்பேரில் ஐகோர்ட்டு, இந்த பொதுப்பாதையை தனிநபர்கள் ஆக்கிரமிக்கக்கூடாது என 2008-ம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால் தற்போது இந்த பொதுப்பாதையில் மீண்டும் வேலி அமைத்து மறித்துவிட்டனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பல்வேறு முறை புகார் அளித்தும், வேலி அகற்றப்படவில்லை. எனவே எங்கள் தெருவை மறித்து அமைத்துள்ள வேலியை அகற்றி, பழைய நிலைக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
1 More update

Next Story