ஈரோடு சோலார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் சிக்கியது


ஈரோடு சோலார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 30 Sep 2021 9:24 PM GMT (Updated: 30 Sep 2021 9:24 PM GMT)

ஈரோடு சோலார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் சிக்கியது.

மொடக்குறிச்சி
ஈரோடு சோலார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் சிக்கியது.
லஞ்ச ஒழிப்பு போலீசார்
ஈரோடு அருகே உள்ள சோலார், கொள்ளுக்காட்டு மேட்டில் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய வாகனங்களுக்கு எண் பதிவு செய்தல், ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்குதல், பழைய வாகனங்களை புதுப்பித்தல், பழைய வாகனங்களுக்கு எப்.சி.காட்டுதல், எல்.எல்.ஆர், விபத்து இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிக அளவில் புரோக்கர்கள் செயல்பட்டு வருவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை 4 மணி அளவில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் தலைமையிலான போலீசார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு 2 ஜீப்களில் சென்றனர்.
ஆவணங்கள் சோதனை
பின்னர் அலுவலகத்தில் உள்ள 2 இரும்பு கதவுகளையும் பூட்டி உள்ளே நுழைந்தனர். அதன்பின்னர் அலுவலகத்தின் முன்பக்க கதவையும் மூடினார்கள். உள்ளே இருந்த யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியே இருந்து யாரையும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. அலுவலக ஊழியர்கள்  வைத்திருந்த செல்போன்களையும் வாங்கி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை தொடங்கினார்கள்.
அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் எடுத்து ஒவ்வொன்றாக சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்த அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரையும் தனி தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அலுவலகத்துக்கு வெளியே இருந்து வந்திருந்தவர்களை என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டனர். அவர்கள் வைத்திருந்த ஆவணங்களையும் வாங்கி சோதனை செய்தனர்.
கணக்கில் வராத பணம்
இதற்கிடையே உள்ளே இருந்த அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் புரோக்கர்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த பணத்தை கட்டுக்கட்டாக பின்புற ஜன்னல் வழியாக வீசியதாகவும், அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனை இரவு வெகுநேரம் வரை  தொடர்ந்து நடந்தது.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Next Story