குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிணத்துக்கடவு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குழாயில் உடைப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்துப்பொள்ளாச்சியில் இருந்து குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிணத்துக்கடவுக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையில் கிணத்துக்கடவு அருகே முள்ளுப்பாடி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மேற்கண்ட குடிநீர் திட்ட குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாக சென்றது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
‘தினத்தந்தி’யில் செய்தி
மேலும் அந்த பகுதியில் மின் விளக்குகளும் இல்லாததால், இரவு நேரங்களில் சாலையில் தேங்கி நின்ற தண்ணீரால் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவியது. இது தொடர்பாக கடந்த 29-ந் தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக குழாய் உடைந்த பகுதியை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, பணியாளர்கள் மூலம் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி தொடங்கியது.
தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி இரும்பு குழாயில் ஏற்பட்டு இருந்த உடைப்பை சரி செய்தனர்.
மகிழ்ச்சி
இதையடுத்து மீண்டும் குடிநீர் வினியோகம் தொடங்கியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அதற்கு காரணமான அதிகாரிகளுக்கும், ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






