ரூ.10¾ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை


ரூ.10¾ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை
x
தினத்தந்தி 3 Oct 2021 2:10 PM GMT (Updated: 3 Oct 2021 2:10 PM GMT)

குன்னூர் ஏல மையத்தில் ரூ.10¾ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையானது. ஆனால் தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

குன்னூர்

குன்னூர் ஏல மையத்தில் ரூ.10¾ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையானது. ஆனால் தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு தொழிற்சாலைகளும், தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் வாங்கி செல்கின்றனர்.

53 சதவீத விற்பனை

வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்களில் குன்னூரில் தேயிலைத்தூள் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 30, 1-ந் தேதிகளில் நடைபெற்ற ஏலத்துக்கு(விற்பனை எண்-39) 22 லட்சத்து 84 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது.

அதில் 16 லட்சத்து 84 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 6 லட்சம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 12 லட்சத்து 7 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 53 சதவீத விற்பனை. இதன் ரொக்க மதிப்பு ரூ.10 கோடியே 87 லட்சம் ஆகும்.

கவலை

ஏலத்தில் விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் ரூ.2 விலை வீழ்ச்சி ஏற்பட்டது. சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.297, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.280 என ஏலம் போனது. 

சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.72 முதல் ரூ.78 வரை, உயர் வகை ரூ.127 முதல் ரூ.211 வரை விற்பனையானது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.65 முதல் ரூ.75 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.148 முதல் ரூ.186 வரை என விலை இருந்தது. தொடர்ந்து விலை வீழ்ச்சி அடைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

அடுத்த ஏலம்(விற்பனை எண்-40) வருகிற 7, 8-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 24 லட்சத்து 14 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வருகிறது. 


Next Story