மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.7½ லட்சம் கொள்ளை


மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.7½ லட்சம்  கொள்ளை
x
தினத்தந்தி 4 Oct 2021 7:12 PM GMT (Updated: 4 Oct 2021 7:12 PM GMT)

திண்டிவனத்தில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.7½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம், 

மோட்டார் சைக்கிள் பெட்டி உடைப்பு
திண்டிவனம் மரக்காணம் ரோடு அடுத்த விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சேகர் (வயது 48). இவர் நான்கு சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் ரூ.7½ லட்சத்தை வைத்து கொண்டு திண்டிவனம் சென்னை சாலையில் உள்ள தனது நண்பரின் கார் மெக்கானிக் செட்டுக்கு சென்றார். பின்னர் அதன் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்துபார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள்  கொள்ளையடித்து சென்று இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். 

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இது குறித்து அவர் திண்டிவனம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திண்டிவனம் பகுதியில் கடந்த சில வாரங்களாக கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இதை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story