பவானிசாகர் அணை நீர்மட்டம் மீண்டும் 102 அடியை நெருங்குகிறது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பவானிசாகர் அணை நீர்மட்டம் மீண்டும் 102 அடியை நெருங்குகிறது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2021 1:03 AM GMT (Updated: 5 Oct 2021 1:03 AM GMT)

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 102 அடியை நெருங்குகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 102 அடியை நெருங்குகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 16 கி.மீ தூரத்திலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து வடகிழக்கில் 36 கி.மீ தூரத்திலும் பவானி ஆறும் மோயாறும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் இந்த அணைக்கு உண்டு. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 
நீர்மட்டம் உயர்வு 
இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 
102 அடி
இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ம் தேதி மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 102 அடியை எட்டியது. பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்து பொதுப்பணித்துறையில் வகுக்கப்பட்ட விதியின் படி அக்டோபர் முதல் தேதியில் இருந்து கடைசி தேதி வரை 102 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,314 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.52 அடியாக இருந்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை
நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,437 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.87 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
அணையின் நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் 102 அடியை தாண்டலாம் என்ற நிலை உள்ளது. அப்போது உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story