கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெயிண்டர் அடித்துக்கொலை; கிருஷ்ணகிரியில் பயங்கரம்


கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெயிண்டர் அடித்துக்கொலை; கிருஷ்ணகிரியில் பயங்கரம்
x
தினத்தந்தி 5 Oct 2021 1:53 AM GMT (Updated: 5 Oct 2021 2:03 AM GMT)

கிருஷ்ணகிரியில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெயிண்டர் ஓட, ஓட விரட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி,
 
கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளி அருகே உள்ள கீழ் பூங்குருதி கிராமத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 28). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாரதி (25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளான். அதேபகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் ரகுபதி (25). இவருக்கும், பாரதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதி கணவரை பிரிந்து ரகுபதியுடன் சென்றார். ஓசூரில் அவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். இதையடுத்து உறவினர்கள், கதிரேசன், பாரதி மற்றும் ரகுபதி ஆகியோரை அழைத்து வந்து பர்கூரில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பாரதி தனது கணவருடன் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து ரகுபதி, அவரது உறவினர் சின்ன திம்மராயன் (45) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் நேற்று பிற்பகல் ஓசூருக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி அருகே சென்ற போது கதிரேசன், அவரது சகோதரர்கள் கேசவன் (25), பாண்டுரங்கன் (21), உறவினர் சதீஷ் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் சென்று ரகுபதியை வழிமறித்து தாக்க முயன்றனர். 

இதனால் ரகுபதி உயிர் பிழைத்தால் போதும் என அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் கதிரேசன் மற்றும் அவருடன் வந்தவர்கள் ரகுபதியை ஓட, ஓட விரட்டி சென்று இரும்பு கம்பியால் தலையில் சரமாரியாக அடித்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதை தடுக்க முயன்ற சின்ன திம்மராயனும் படுகாயம் அடைந்தார்.

ரகுபதியை கொலை செய்ததும் கதிரேசன் தரப்பினர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் சின்ன திம்மராயன் துடித்துக் கொண்டிருப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அவர்கள் கொலையுண்ட ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசன் உள்பட 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 

கள்ளக்காதலை கைவிட மறுத்த பெயிண்டர் ஓட, ஓட விரட்டி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story