உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகல தொடக்கம்


உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகல தொடக்கம்
x
தினத்தந்தி 7 Oct 2021 9:32 PM GMT (Updated: 7 Oct 2021 9:32 PM GMT)

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக நேற்று தொடங்கியது. இதனை பசவராஜ் பொம்மை முன்னிலையில், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைத்தார்.

மைசூரு:

மைசூரு தசரா விழா

  கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுேதாறும் நடைபெறும் தசரா விழா உலக புகழ்பெற்றது ஆகும். விஜயதசமி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா கர்நாடகத்தின் அடையாளமாகவும் உள்ளது.

  மகிஷாசூரன் என்ற அரக்கனை மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்த நாளையே மைசூரு மக்கள் தசராவாக கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இந்த தசரா விழா மன்னர் காலத்தில் இருந்தே வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1971-ம் ஆண்டு வரை மைசூரு தசரா மன்னர் குடும்பத்தினரால் கொண்டாடப்பட்டு வந்தது.

எஸ்.எம்.கிருஷ்ணா

  அதன்பின்னர் 1972-ம் ஆண்டில் இருந்து கர்நாடக அரசு சார்பில் ஆண்டுதோறும் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை மைசூருவில் 410 தசரா விழாக்கள் கொண்டாடப்பட்டு உள்ளது.

  இந்த தசரா விழாவை கண்டுகளிக்க கர்நாடகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மராட்டியம், தெலுங்கானாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தசரா விழா அக்டோபர் 7-ந் தேதி(அதாவது நேற்று) தொடங்கி 15-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் என்று அரசு அறிவித்து இருந்தது.

400 பேருக்கு அனுமதி

  மேலும் கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழா எளிமையாக நடைபெறும் என்றும், மைசூரு தசரா விழாவை முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைப்பார் என்றும் அரசு அறிவித்து இருந்தது.

  மேலும் கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா தொடக்க விழாவில் கலந்து கொள்ள முதலில் 100 பேருக்கு அனுமதி அளித்து இருந்த அரசு பின்னர் 400 பேருக்கு அனுமதி அளித்தது. தசரா விழாவை தொடங்கி வைக்க நேற்று முன்தினமே எஸ்.எம்.கிருஷ்ணா மைசூருவுக்கு வந்து தங்கி இருந்தார்.

கலந்து கொண்டவர்கள்

  இந்த நிலையில் நேற்று காலை 8 மணியில் இருந்து 8.45 மணிக்குள் துலாம் லக்கனத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வெள்ளித்தேரில் எழுந்தருளினார். அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில், சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மலர் தூவியும், குத்துவிளக்கு ஏற்றியும் தசரா விழாவை எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைத்தார். இது 411-வது தசரா விழா ஆகும்.

  இந்த நிகழ்ச்சியில் மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், மந்திரிகள் அசோக், சுதாகர், பைரதி பசவராஜ், நாராயண கவுடா, சுனில்குமார், சசிகலா ஜோலே, சிவராம் ஹெப்பார், எம்.எல்.ஏ.க்கள் ஜி.டி.தேவேகவுடா, நிரஞ்சன்குமார், ராமதாஸ், நாகேந்திரா, ஹர்ஷவர்தன், தன்வீர்சேட், மகாதேவ், மாநகராட்சி மேயர் பாலநேத்ரா, கலெக்டர் பகாதி கவுதம், பிரதாப் சிம்ஹா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரண்மனையில் ஜம்பு சவாரி

  ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மைசூரு அரண்மனை வளாகத்தில் மட்டும் இந்த ஆண்டு கலைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. அதிலும் குறைவான நபர்களே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் டி.வி, மற்றும் இணையதளங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளது.

  நேற்று ெதாடங்கிய தசரா விழா 15-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அன்றைய தினம் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்தபடி அபிமன்யு யானை மைசூரு அரண்மனையை சுற்றி ஊர்வலம் வரும். அந்த யானையை பின்தொடர்ந்து மற்ற யானைகள் செல்லும். பொதுவாக ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரு அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பன்னிமண்டபம் வரை நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரு அரண்மனை வளாகத்திற்குள் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பார் நடத்திய இளவரசர் யதுவீர்

  இந்த நிலையில் நேற்று மைசூரு தசரா தொடங்கியதையொட்டி அரண்மனையில் ஜோடித்து வைக்கப்பட்டு இருந்த சிம்மாசனத்தில் அமர்ந்து இளவரசர் யதுவீர் உடையார் தனியார் தர்பார் நடத்தினார். அதாவது காலை 10.15 மணியில் இருந்து காலை 10.45 மணி வரை ½ மணி நேரம் இளவரசர் யதுவீர் தர்பார் நடத்தி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது நடக்கட்டும் என்றும் சாமுண்டீஸ்வரி தேவியிடம், இளவரசர் யதுவீர் வேண்டி கொண்டார்.

  முன்னதாக நேற்று காலை 5 மணிக்கு மஞ்சள் தண்ணீரில் குளித்த இளவரசர் யதுவீர் அரண்மனை வளாகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பிறகு அரண்மனையில் கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவகிரக பூஜை, பாதபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இளவரசர் அமர்ந்து தர்பார் நடத்தும் சிம்மாசனத்திற்கும் பூஜைகள் செய்யப்பட்டன. தசரா விழாவையொட்டி அரண்மனைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் மன்னர் குடும்பத்தினர், அரண்மனை ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டு இருந்தனர்.

Next Story