‘ஆன்லைன்’ மூலம் வேலைக்கு விண்ணப்பித்த இளம்பெண்ணிடம் நூதன முறையில் நகை, செல்போன் பறிப்பு


‘ஆன்லைன்’ மூலம் வேலைக்கு விண்ணப்பித்த இளம்பெண்ணிடம் நூதன முறையில் நகை, செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2021 3:12 AM GMT (Updated: 10 Oct 2021 3:12 AM GMT)

‘ஆன்லைன்’ மூலம் வேலைக்கு விண்ணப்பித்த இளம்பெண்ணிடம் நூதன முறையில் நகை, செல்போன் பறிப்பு.

சென்னை,

சென்னை மிண்ட் மாடர்ன் சிட்டி 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நூர்ஜஹான் (வயது 25). இவர் தனியார் வேலை வாய்ப்புக்காக ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்திருந்தார். வினோத்குமார் என்பவர் அவரை தொடர்புகொண்டு ராயப்பேட்டை லூயிஸ் சாலைக்கு வாருங்கள் என்று அழைத்தார்.

வேலை கிடைக்கப்போகிறது என்ற ஆர்வத்தில் நூர்ஜஹானும் புறப்பட்டு சென்றார். அவரிடம் வினோத்குமார் நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது நகை அணிந்திருக்க கூடாது. கையில் செல்போன் வைத்திருக்க கூடாது என்று தெரிவித்தார். இதையடுத்து நூர்ஜஹான் தான் அணிந்திருந்த 2½ பவுன் தங்கநகைகள், செல்போனை வினோத்குமாரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர் சிறிது நேரம் இருங்கள் என்று கூறிவிட்டு லாயிட்ஸ் காலனி அரசு அதிகாரிகள் குடியிருப்புக்குள் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வராததால் நூர்ஜஹான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் அவர், வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவரது தாயார் எசுபிளனேடு போலீஸ்நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். அப்போது அவர்கள், போலீசாரிடம் சம்பவம் பாரிமுனையில் நடந்ததாக பொய் சொன்னதாக தெரிகிறது. பின்னர் போலீசார் விசாரித்தபோது சம்பவம் ராயப்பேட்டை பகுதியில் நடந்தது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து எசுபிளனேடு போலீசார் அறிவுரையின்பேரில் அவர்கள் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Next Story