தி.மு.க. பிரமுகர் தற்கொலை விவகாரத்தில் மனைவி கைது


தி.மு.க. பிரமுகர் தற்கொலை விவகாரத்தில் மனைவி கைது
x
தினத்தந்தி 11 Oct 2021 10:57 AM GMT (Updated: 11 Oct 2021 10:57 AM GMT)

தி.மு.க. பிரமுகர் தற்கொலை விவகாரத்தில் நிஷாவை நேற்று கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டை முகமது உசேன் தெருவை சேர்ந்தவர் வித்தியக்குமார் (வயது 34). தி.மு.க. பிரமுகரான இவருக்கும், அவருடைய மனைவி நிஷாவுக்கும் (32) திருமணமாகி 9 மாதங்களே ஆனநிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் அளித்திருந்தனர். இதில் நிஷா தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், வித்தியக்குமார் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வித்தியக்குமாரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வித்தியக்குமார், கடந்த 4-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

தற்கொலை செய்வதற்கு முன்பு தனது சாவுக்கு மனைவி நிஷாவும், அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என்று அவர் பேசிய வீடியோ காட்சியை பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டார். மேலும் நிஷா கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக வித்தியக்குமாரின் குடும்பத்தினர், ஜாம்பஜார் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிஷாவை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


Next Story