நிலக்கரி தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா? - சித்தராமையா கேள்வி


நிலக்கரி தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா? - சித்தராமையா கேள்வி
x
தினத்தந்தி 11 Oct 2021 9:06 PM GMT (Updated: 11 Oct 2021 9:06 PM GMT)

நிலக்கரி தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:

  கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மின் தட்டுப்பாடு

  நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இது செயற்கை முறையில் ஏற்படுத்தப்பட்டதா? அல்லது இயற்கையாகவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? என்பது முதலில் தெரிய வேண்டும். கர்நாடகத்தில் இதுவரை மின் தட்டுப்பாடு இல்லை. கர்நாடகத்தில் மின் உற்பத்தி தேவையை விட அதிகமாக உள்ளது. மேலும் அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டு வருவதால், நிலக்கரி தேவையும் குறைந்துவிட்டது.

  மின் உற்பத்தி நிலையங்களை தனியாருக்கு விடும் நோக்கத்தில் செயற்கையாக நிலக்கரி தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடாது. ஒருவேளை அவ்வாறு செய்தால் அதை நான் கண்டிக்கிறேன். மின் உற்பத்தி நிலையங்களை தனியார் மயமாக்கக்கூடாது. இதனால் விவசாயிகளுக்கு அநீதி ஏற்படும். மின்துறை தனியார் மயமாக்கப்பட்டால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.

பெட்ரோலிய பொருட்கள்

  தேசபக்தர்களின் அரசு, பெங்களூரு பொறுப்பு பதவியை பெற மந்திரிகள் மோதிக் கொள்கிறார்கள். இது அதிக லாபம் தரும் பொறுப்பு என்பதால், இந்த மோதல் நடக்கிறது. ஜி.எஸ்.டி. நிவாரணம், நமது வரி பங்கை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தைரியமாக கேட்க வேண்டும். இது பிச்சை அல்ல. நமது உரிமை. தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின், பெட்ரோல் விலையை குறைத்தார். அதே போல் கர்நாடகத்திலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும். அப்போது தான் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்.

  மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி உயர்வால் கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.23 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் இருந்து மட்டும் ரூ.1.20 லட்சம் கோடி கிடைத்துள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை என்பதற்காக ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவது சரியா?.

பா.ஜனதா கொள்கை

  அம்பானியும், அதானியும் வளர வேண்டும். ஆனால் ஏழை மக்கள் மட்டும் சாக வேண்டுமா?. இது தான் பா.ஜனதாவின் கொள்கை. ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டும். இதை நான் நீண்ட காலமாக கூறி வருகிறேன். அவர் கட்சியின் தலைவர் பதவியை விரைவாக ஏற்க வேண்டும்.
  இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story