விறு விறுப்பான வாக்கு எண்ணிக்கை


விறு விறுப்பான வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2021 4:54 PM GMT (Updated: 12 Oct 2021 4:54 PM GMT)

பொள்ளாச்சி, ஆனைமலையில் இடைத்தேர்தலையொட்டி விறு விறுப்பான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலையில் இடைத்தேர்தலையொட்டி விறு விறுப்பான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இடைத்தேர்தல்

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கும், ஆனைமலை ஒன்றியம் திவான்சாபுதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கும், ஜமீன்முத்தூரில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், போளிகவுண்டன்பாளையத்தில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், கிணத்துக்கடவு ஒன்றியம் நெ.10 முத்தூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், சுல்தான்பேட்டை ஒன்றியம் போகம்பட்டி ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போளிகவுண்டன்பாளையம் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு பெண் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், அங்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

இதையடுத்து கடந்த 9-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. திவான்சாபுதூர் ஊராட்சியில் 8,572 வாக்காளர்கள் உள்ளனர். தென்குமாரபாளையம் ஊராட்சியில் 2962 வாக்காளர்களும், ஜமீன்முத்தூர் ஊராட்சி 6-வது வார்டில் 634 வாக்காளர்களும் உள்ளனர். இதில் தென்குமாரபாளையம் ஊராட்சியில் 2312 வாக்குகளும், திவான்சாபுதூர் ஊராட்சியில் 6552 வாக்குகளும், ஜமீன்முத்தூர் ஊராட்சி 6-வது வார்டில் 424 வாக்குகளும் பதிவானது. தொடர்ந்து ஓட்டுப்பெட்டிகள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

வாக்கு எண்ணிக்கை

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தல் மண்டல அலுவலர் முனிராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர் சாய்ராஜ் சுப்பிரமணியம் ஆகியோரது முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகள் திறந்து எண்ணப்பட்டன. 3 மேஜைகள் போடப்பட்டு, ஒரு மேஜைக்கு 2 பேர் வீதம் 6 பேர் மற்றும் வேட்பாளர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கலவரம் ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தும் வகையில் வஜ்ரா வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. திவான்சாபுதூர் ஊராட்சியில் கலைவாணி 4372 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சரோஜினி 2075 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 105 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

வெற்றி சான்றிதழ்

தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் எண்ணப்பட்டன. 2 மேஜைகள் போடப்பட்டு விறு விறுப்பாக வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் நாராயணமூர்த்தி 1,451 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சரஸ்வதி 838 வாக்குகள் பெற்றார். 23 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. 

ஜமீன்முத்தூர் 6-வது வார்டில் செந்தில்குமார் 289 வாக்குகள், போகம்பட்டி ஊராட்சி 6-வது வார்டில் சந்தியா 214 வாக்குகள், நெ.10 முத்தூர் ஊராட்சி 2-வது வார்டில் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இதை தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.


Next Story