மார்க்கெட்டுகளில் பழங்கள் விலை உயர்வு


மார்க்கெட்டுகளில் பழங்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 12 Oct 2021 5:43 PM GMT (Updated: 12 Oct 2021 5:43 PM GMT)

மார்க்கெட்டுகளில் பழங்கள் விலை உயர்வு

கோவை

ஆயுத பூஜையையொட்டி பழங்கள்  விலை உயர்ந்துள்ளது.

ஆயுத பூஜை

ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்வது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜையின் போது பொதுமக்கள் பூக்கள், பழங்கள், வாழை கன்றுகள், பொரி, சுண்டல் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபாடு செய்வார்கள். இதனால் பூஜை பொருட்கள் மற்றும் பூக்கள் வாங்க பூ மார்க்கெட், கடைவீதிகளில் நேற்று பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. தொடர் மழை மற்றும் மக்கள் கூட்டம் காரணமாக  பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்ந்தது.

இதுகுறித்து பூ மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

தொடர் மழை

தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள கோவையில் ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்படும். தற்போது தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருவதால், பூக்கள் அழுகியும், வாடியும் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.500-க்கு விற்ற மல்லிகை நேற்று முன்தினம் ரூ.700-க்கும், நேற்று ரூ.800-க்கும் விற்கப்பட்டது. இதேபோல் கடந்த வாரம் ரூ.400-க்கு விற்ற ஜாதி மற்றும் முல்லை நேற்று முன்தினம் ரூ.600-க்கும் நேற்று ரூ.800 வரையும் விற்கப்பட்டது. ஆயுத பூஜைக்கு அதிகம் விற்பனையாகும் செவ்வந்தி பூ கிலோ ரூ.200 முதல் ரூ.240 வரையும். அரளி கிலோ ரூ.350-க்கும், கோழிக்கொண்டை ரூ.70-க்கும் விற்கப்பட்டது.


15 டன் பூக்கள் வந்தது

இதேபோல் 1½ அடி மாலை ரூ.150-க்கும், 2 அடி மாலை ரூ.200-க்கும், 2 அடி ரோஜாப்பூ மாலை ரூ.250-க்கும் விலை போனது. 3 அடி உயரம் கொண்ட வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டது. மேலும் மாந்தளிர் தென்னங்குருத்து உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் நாளை (இன்று) இதை விட விலை அதிகரிக்கலாம். வழக்கமாக 2 முதல் 3 டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் ஆயுத பூஜையையொட்டி நேற்று 15 டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பூவன் வாழைத்தார் ரூ.1400

இதேபோன்று தொடர் மழை காரணமாக அழுகல் அதிகரித்துள்ளதால் வரத்து குறைந்து பன்னீர் திராட்சை விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்ற பன்னீர் திராட்சை நேற்று ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது. ஆப்பிள் ஒரு கிலோ ரூ.120, சாத்துக்குடி ரூ.80, ஆரஞ்சு ரூ.60, மாதுளை ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. 


இதேபோல் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூவன் வாழைத்தார் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. கடந்த வாரம் ரூ.800-க்கு விற்கப்பட்ட வாழைத்தார் நேற்று ரூ.1,400 வரை விற்பனை செய்யப்பட்டது. பூவன் ஒரு கிலோ ரூ40-க்கும், செவ்வாழை தார் ரூ.800-க்கும், கற்பூரவள்ளி தார் ரூ.600-க்கும் விற்பனையானது. 

முன்னதாக பொதுமக்கள் கூட்டம் காரணமாக பூ மார்க்கெட் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டடனர்.

Next Story