ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 13 Oct 2021 3:45 PM GMT (Updated: 13 Oct 2021 3:45 PM GMT)

தேனி மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

உப்புக்கோட்டை:
தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், பூதிப்புரம், சின்னமனூர், கோட்டூர், சீலையம்பட்டி, ஆண்டிப்பட்டி, மரிக்குண்டு, சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ, கனகாம்பரம், செண்டுப்பூ, செவ்வந்தி, ரோஜா போன்ற பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் அனைத்தும் தேனி, சீலையம்பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்கெட்டுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. 
தற்போது நவராத்திரி விழா நடைபெற்று வருவதால் மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) ஆயுதபூஜை மற்றும் நாளை விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜையை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடை, வீடுகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதற்காக மக்கள் அதிக அளவில் பூக்களை வாங்குவார்கள். இதனால் மார்க்கெட்டுகளில் நேற்று பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. 
இதற்கிடையே ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி கடந்தவாரம் ரூ.300-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ, நேற்று ரூ.800-க்கு விற்பனை ஆனது. இதேபோல் கனகாம்பரம் கிலோ ரூ.300, ஜாதிப்பூ ரூ.400, முல்லை ரூ.500, சம்பங்கி ரூ.200, மரிக்கொழுந்து ரூ.70, செண்டுப்பூ ரூ.120, துளசி ரூ.40, கோழிக்கொண்டை ரூ.60, அரளிப்பூ ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

Next Story