ஸ்பெயினில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில் ஈரோடு வீரர் இனியன் சாம்பியன்


ஸ்பெயினில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில் ஈரோடு வீரர் இனியன் சாம்பியன்
x
தினத்தந்தி 13 Oct 2021 7:35 PM GMT (Updated: 13 Oct 2021 7:35 PM GMT)

ஸ்பெயினில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில் ஈரோடு வீரர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஈரோடு
ஸ்பெயினில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில் ஈரோடு வீரர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.
சர்வதேச போட்டியில் இனியன் வெற்றி
ஈரோட்டை சேர்ந்த இளம் சதுரங்க வீரர் இனியன், இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக உள்ளார். சர்வதேச அளவில் நடைபெறும் சதுரங்க போட்டிகளில் வெற்றியை குவித்து வருகிறார்.
இவர் ஸ்பெயின் நாட்டில் கடந்த 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடந்த லா-நுசியா சர்வதேச ஓபன் சதுரங்க சாம்பியன் கோப்பை போட்டி 2021-ல் பங்கேற்று ப.இனியன் இந்தியாவுக்காக விளையாடினார். இந்த போட்டியில் 14 நாடுகளை சேர்ந்த 88 வீரர்கள் பங்கேற்றனர். சர்வதேச அளவில் சிறந்த வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டி 9 சுற்றுகளாக நடந்தது. இதில் கிளாசிக்கல் பிரிவில் 6 போட்டிகளில் இனியன் வெற்றி பெற்றார். 2 போட்டிகளை சமன் செய்தார். இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் இனியன் 7 புள்ளிகள் பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த போட்டியில் சிலி நாட்டை சேர்ந்த ரோட்ரிகோ 2-ம் இடத்தையும், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆண்ட்ரே சுமித் 3-ம் இடமும் பிடித்தனர்.
பாராட்டு
சர்வதேச அளவிலான சாம்பியன் கோப்பை போட்டி நடந்து கொண்டிருக்கும்போது கிராண்ட் மாஸ்டர் இனியன் ஏற்கனவே விளையாடுவதாக ஒப்புக்கொண்ட சூப்பர் செஸ் லீக் ஆன்லைன் போட்டியில் விளையாட வேண்டியது இருந்தது. இதனால் அவரால் 8-வது சுற்றில் விளையாட முடியவில்லை. இருப்பினும் 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் அவர் விளையாடிய 8 சுற்றுகளையும் (8-வது சுற்றுதவிர) சிறப்பாக விளையாடி இஸ்ரேல், சிலி, ஸ்பெயின், கியூபா நாடுகளின் கிராண்ட் மாஸ்டர்களை வெற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட் மாஸ்டர் இனியனுக்கு சென்னையை சேர்ந்த பயிற்சியாளர் கே.விஸ்வேஸ்வரன் பயிற்சி அளித்து வருகிறார். சதுரங்க போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர் இனியனுக்கு அவரது நன்கொடையாளர்களான மைக்ரோசென்ஸ், சக்திசுகர்ஸ், சக்தி மசாலா நிறுவனத்தினர் பாராட்டு தெரிவித்தனர். இனியன் தற்போது கோவையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்த தகவலை இனியனின் தந்தை கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Next Story