ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் மோட்டார்சைக்கிள் பறிமுதல்; அபராதம் விதித்த பின்னர் விடுவிக்கப்பட்டது


ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் மோட்டார்சைக்கிள் பறிமுதல்; அபராதம் விதித்த பின்னர் விடுவிக்கப்பட்டது
x
தினத்தந்தி 13 Oct 2021 7:50 PM GMT (Updated: 13 Oct 2021 7:50 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டது. 
ஹெல்மெட்
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் 13-ந் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். 
அதன்படி ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை கண்டுபிடிக்க நேற்று காலை முதல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். 
பறிமுதல்
இந்த நிலையில் கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், சிறுவலூர், நம்பியூர், வரப்பாளையம், கடத்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலா ரூ.100 ரூபாய் அபராதம் விதித்தார்கள். சிலரிடம் வாகனங்களை பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு, ஹெல்மெட் வாங்கி வந்து பின்னர் வண்டியை எடுத்து செல்லுங்கள் என்று எச்சரித்தார்கள். 
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் மற்றும் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் போலீசார் நேற்று காலை 8 மணி முதல் சத்தியமங்கலம் புது பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 200 பேரை தடுத்து நிறுத்தி வாகனங்களை பறிமுதல் செய்தார்கள். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் சத்தி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு தலா ரூ.200 அபராதம் விதித்து, மோட்டார்சைக்கிள்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்கள். 
பெருந்துறை
பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், விஜயராஜ், மகேந்திரன், மோகன்ராஜ் ஆகியோர் பெருந்துறை நகரில் உள்ள அண்ணா சிலை சந்திப்பு, பழைய பஸ் நிலைய சந்திப்பு, காவல் நிலைய சந்திப்பு, நால்ரோடு சந்திப்பு, குன்னத்தூர் ரோடு சந்திப்பு முதலான முக்கிய இடங்களில் நேற்று காலை முதல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் பின்புறம் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்கள் என மொத்தம் 140 பேர் பிடிபட்டனர். அவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து தலா ரூ.100 அபராதமாக விதித்தார்கள். ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் அனைத்தும், மாலையில் விடுவிக்கப்பட்டது.
சென்னிமலை
சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உமாபதி, கிருஷ்ணன், கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சென்னிமலை பஸ் நிலையம், குமரன் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற 110 இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதத்துடன் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னிமலை போலீசார் வாகன ஓட்டிகளை எச்சரித்தனர்.

Next Story