வணிக வளாகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள்


வணிக வளாகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 Oct 2021 6:21 PM GMT (Updated: 14 Oct 2021 6:21 PM GMT)

பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள், அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத்தவிர்த்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவு எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முககவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு தனிநபரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும்.

விடுமுறை நாட்களில் மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள நகர்புற சமுதாய நல மையங்கள் மற்றும் மகளிருக்கான மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் நகர்புற சமுதாய நல மையங்களில் தடுப்பூசியினை செலுத்திக் கொண்டு பயனடையலாம்.

கவனமாக இருக்க வேண்டும்

பண்டிகை விடுமுறை நாட்களான வியாழக்கிழமை (இன்று) மற்றும் வெள்ளிக்கிழமை (நாளை) வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மற்றும் காவல் துறையின் சார்பில் மேலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் மே மாதம் முதல் அக்டோபர் 12-ந்தேதி வரை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 9 ஆயிரத்து 554 நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் 90 ஆயிரத்து 226 தனிநபர்களிடமிருந்து ரூ.4 கோடியே 78 லட்சத்து 30 ஆயிரத்து 990 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story