செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் பலி


செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 17 Oct 2021 5:47 PM GMT (Updated: 17 Oct 2021 5:47 PM GMT)

செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் பலி

போத்தனூர்

மதுக்கரை அருகே  படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியதால் செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

கல்லூரி மாணவர் 

கோவையை அடுத்த மதுக்கரை அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 57), கூலி தொழிலாளி. இவருடைய மகன் சிவராம் (18). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.  

இவர் கடந்த 10-ந் தேதி விடுமுறை என்பதால் தனது நண்பர் களை பார்க்க சென்றார். பின்னர் அவர் இரவில் வீடு திரும்பி னார். அதன் பின்னர் அவர் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டபடி அதை உபயோகித்து உள்ளதாக தெரிகிறது. 

செல்போன் வெடித்தது 

பின்னர் அவர் தான் படுத்து இருந்த கட்டிலில் செல்போனை வைத்து சார்ஜ் போட்டபடியே தூங்கி விட்டார். இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் சிவராம் படுத்து இருந்த அறையில் இருந்து டமார் என்று பயங்கர சத்தம் கேட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வேகமாக எழுந்து அவருடைய அறைக்கு ஓடினார்கள். அப்போது செல்போன் வெடித்து சிதறியதுடன், அதனால் ஏற்பட்ட தீ, சிவராம் படுத்து இருந்த கட்டிலில் உள்ள மெத்தையில்  பிடித்து மளமளவென எரிந்து கொண்டு இருந்தது. 

பரிதாப சாவு 

இதில் படுகாயம் அடைந்த சிவராமை, பெற்றோர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி சிவராம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story