ஈரோட்டில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 521 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


ஈரோட்டில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 521 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Oct 2021 9:06 PM GMT (Updated: 18 Oct 2021 9:06 PM GMT)

ஈரோட்டில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 521 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு
ஈரோடு 46 புதூர் நொச்சிக்காட்டுவலசு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரும், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் 46 புதூர் நொச்சிக்காட்டுவலசு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 521 கிலோ புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த நாட்ராயன் (வயது 39) என்பதும், அவர் வெளி மாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து அதை ஈரோட்டில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்ராயனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 521 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதேபோல் ஈரோடு ஈ.பி.பி. நகர் பகுதியில் மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளர்கள் விஜயகுமார் (49), தாதேஸ்வரன் ஆகியோரை வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1,800 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story