நீர்பிடிப்பு பகுதியில் மழை பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு- பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


நீர்பிடிப்பு பகுதியில் மழை பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு- பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2021 9:58 PM GMT (Updated: 21 Oct 2021 9:58 PM GMT)

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. 
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. 
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. 
நீர்வரத்து அதிகரிப்பு
தற்போது பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 832 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 1,500 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் திறக்கப்பட்டது.  
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 33 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 3 ஆயிரத்து 700 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. 
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வருவாய்த் துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story