ஈரோடு மாவட்டத்தில்நெல் பயிருக்கு பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


ஈரோடு மாவட்டத்தில்நெல் பயிருக்கு பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2021 9:58 PM GMT (Updated: 21 Oct 2021 9:58 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
காப்பீடு
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- 
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் ‘அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம்’ மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அனைத்து வருவாய் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். நெல் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.528 செலுத்த வேண்டும். கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
நவம்பர் 15-ந்தேதி கடைசிநாள்
கடன் பெறா விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிர் சாகுபடி சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்குபுத்தகத்தின் முதல் பக்கநகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
வருகிற நவம்பர் மாதம் 15-ந்தேதி சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இறுதிநேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே பதிவுசெய்து தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Next Story