கொள்முதல் நிலையத்தில் நெல் முளைத்ததால் விவசாயிகள் கவலை-சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


கொள்முதல் நிலையத்தில் நெல் முளைத்ததால் விவசாயிகள் கவலை-சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 9:31 PM GMT (Updated: 22 Oct 2021 9:31 PM GMT)

சோழவந்தான் அருகே கொள்முதல் நிலையத்தில் நெல் முளைத்ததால் விவசாயிகள் கண்ணீர் வடித்து உள்ளனர். நெல்லை கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோழவந்தான், 

சோழவந்தான் அருகே கொள்முதல் நிலையத்தில் நெல் முளைத்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். நெல்லை கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மழையால் நெல் முளைத்தன

ேசாழவந்தான் பகுதியில் கருப்பட்டி, இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், சாலாட்சிபுரம், அமைச்சியாபுரம், கணேசபுரம், பொம்மன்பட்டி ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.
 கருப்பட்டி கிராமத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் சுமார் 14 ஆயிரம் நெல் மூடைகள் குவியல், குவியலாக குவிக்கப்பட்டுள்ளன. நெல் கொள்முதல் நிலையம் சரிவர இயங்காததால் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அங்கு குவிக்கப்பட்ட நெல் மழையில் நனைந்து முளைத்து வருகிறது. இதனால் கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவித்து ைவத்து உள்ள விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

சாலை மறியல்

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று காலை 9 மணியளவில் கருப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் .சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது விவசாயிகள் மருதையா, உமர்தீன் ஆகியோர் கூறியதாவது:-
நெல் கொள்முதல் செய்வார்கள் என நம்பி அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்து உள்ளோம். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூடைகள் குவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நெல் கொள்முதல் செய்து அதை குடோனுக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் குவித்து வைக்கப்பட்ட நெல் முளைக்க தொடங்கிவிட்டன. ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி நெல் சாகுபடி செய்து இப்போது விற்க முடியாமல் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளதால் நாங்கள் கடும் வேதனை அடைந்து உள்ளோம் என்றனர். போலீசார் நெல்கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story