நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- அதிக அளவில் உபரிநீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை


நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- அதிக அளவில் உபரிநீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2021 9:39 PM GMT (Updated: 22 Oct 2021 9:39 PM GMT)

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் உபரிநீர் அதிக அளவில் திறக்கப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் உபரிநீர் அதிக அளவில் திறக்கப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த நிலையில் தற்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6033 கன அடி தண்ணீர் வந்தது.
நேற்று மாலை 6 மணியளவில் நீர்வரத்து வினாடிக்கு 7632 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 5300 கன அடி தண்ணீரும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வருவாய்த் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
--------

Next Story