திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 9:40 PM GMT (Updated: 22 Oct 2021 9:40 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை செல்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் செல்வதற்கு இது முக்கிய பாதையாகும். அதனால் எப்போதும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும், இங்கிருந்து கர்நாடகாவுக்கும் வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும். 
திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சாதாரணமாக வரும் லாரிகள் இந்த வளைவுகளை கடந்து விடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளை கடக்க முடியாமல் பழுதாகி நின்ற ுவிடுகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு என்பது தீராத பிரச்சினையாக உள்ளது. 
லாாி கவிழ்ந்தது
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சேலத்துக்கு மர பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துகொண்டு இருந்தது. லாரியை கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜெயபால் (வயது 43) என்பவர் ஓட்டினார். 
நேற்று அதிகாலை 5 மணியளவில் திம்பம் மலைப்பாதையின் 26-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியது. அப்போது நிலைதடுமாறி நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் ஜெயபால் காயமின்றி உயிர் தப்பினார். 
போக்குவரத்து பாதிப்பு
நடுரோட்டிலேயே லாரி கவிழ்ந்து கிடந்ததால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி ரோட்டோரத்துக்கு இழுத்து வரப்பட்டது. அதன்பின்னரே 3 மணி நேர போக்குவரத்து பாதிப்புக்கு பிறகு வாகனங்கள் செல்ல தொடங்கின. 

Next Story