சென்னிமலை அருகே வீடு புகுந்து துணிகரம் கணவன்-மனைவியை தாக்கி பணம் கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சென்னிமலை அருகே வீடு புகுந்து துணிகரம் கணவன்-மனைவியை தாக்கி பணம் கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Oct 2021 9:00 PM GMT (Updated: 23 Oct 2021 9:00 PM GMT)

சென்னிமலை அருகே நள்ளிரவு வீடு புகுந்து கணவன்-மனைவியை தாக்கி பணத்தை கொள்ளையடித்துவிட்டு் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னிமலை
சென்னிமலை அருகே நள்ளிரவு வீடு புகுந்து கணவன்-மனைவியை தாக்கி பணத்தை கொள்ளையடித்துவிட்டு் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கணவன்-மனைவி
சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு வேப்பங்காட்டுதோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 75). விவசாயி. அவருடைய மனைவி அங்கம்மாள் (வயது 73). இவர்களுடைய மகள் திருமணம் ஆகி சென்னிமலையில் வசித்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி 2 பேரும் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு தாழ்ப்பாள் போட்டுவிட்டு 2 பேரும் வீட்டுக்குள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணி அளவில் வெளியே கோழிகள் கத்தும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அங்கம்மாள் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது அங்கு சுமார் 30 முதல் 40 வயதுடைய மர்மநபர்கள் 2 பேர் முக கவசம் அணிந்தபடி நின்று கொண்டிருந்தனர். இதனால் அங்கம்மாள் அதிர்ச்சி அடைந்தார். அவர்களிடம் நீங்கள் யார்? எதற்காக வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்.
மர்மநபர்கள்
அதற்கு மர்மநபர்கள் 2 பேரும், ‘உன் தாலிசங்கிலி எங்கே? அதை கழற்றி கொடு’ என்றனர். என்னிடம் கவரிங் நகை தான் உள்ளது. அதை பாத்ரூமில் வைத்துள்ளேன் என்றார். உடனே அதில் ஒரு நபர் பாத்ரூமுக்கு சென்று கவரிங் நகையை தேடி பார்த்தார். ஆனால் அங்கு கவரிங் நகை இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்து 2பேரும் அங்கம்மாளை தடியால் தாக்கியுள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் அவர், “அய்யோ, அம்மா” என்று சத்தம் போட்டுள்ளார்.
சத்தம் கேட்டு் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த பழனிசாமியும் வெளியே ஓடிவந்து, மர்மநபர்கள் 2பேரையும் தடுக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அவரையும் தாக்கியுள்ளனர். இதில் கணவனும், மனைவியும் லேசான காயம் அடைந்தனர்.
வலைவீச்சு
அதன்பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டு்க்குள் புகுந்தனர். அங்கு ஏற்கனவே திறந்திருந்த பீரோவில் மணிபர்சில் வைக்கப்பட்டு இருந்த ரூ.9 ஆயிரத்து 400-யை ெகாள்ளையடித்துவிட்டு் அங்கிருந்து 2 பேரும் தப்பித்து சென்றனர். காயம் அடைந்த பழனிசாமியும், அங்கம்மாளும் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் 2பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story