பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வினாடிக்கு 8,528 கன அடி தண்ணீர் வந்தது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வினாடிக்கு 8,528 கன அடி தண்ணீர் வந்தது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2021 9:00 PM GMT (Updated: 23 Oct 2021 9:00 PM GMT)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 8 ஆயிரத்து 528 கன அடி தண்ணீர் வந்தது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 8 ஆயிரத்து 528 கன அடி தண்ணீர் வந்தது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 809 கன அடியாக இருந்தது.
அணையின் நீர்மட்டம் 102 அடியாகவே தொடர்ந்து இருந்தது. பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 528 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 6 ஆயிரத்து 200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வருவாய்த் துறை சார்பாக தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story