கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில வாலிபர்


கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில வாலிபர்
x
தினத்தந்தி 27 Oct 2021 8:48 PM GMT (Updated: 27 Oct 2021 8:48 PM GMT)

ஈரோட்டில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த வடமாநில வாலிபர் மீண்டும் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோட்டில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த வடமாநில வாலிபர் மீண்டும் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை மிரட்டல்
ஈரோடு பெருந்துறை ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா மேம்பாலத்துக்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்துக்கு நேற்று மாலை வாலிபர் ஒருவர் சென்றார். அவர் திடீரென அங்குள்ள படிக்கட்டு வழியாக விறுவிறுவென ஏறி மாடிக்கு சென்றார். 2-வது மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்த சன்சேடு சிலாப் மீது இறங்கினார். பின்னர் அங்கிருந்த கற்களை எடுத்து கீழ் நோக்கி வீசினார். மேலே இருந்து கற்கள் விழுவதை பார்த்த அங்கிருந்தவர்கள் மேல்நோக்கி பார்த்தனர். அப்போது சிலாப் மீது நின்றிருந்தவர் கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சிப்பதாக மிரட்டல் விடுத்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை கீழே இறங்கி வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து மேலே நின்று கொண்டு இருந்தார். இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். மேலும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து அந்த நபரை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர்.
ரெயிலில் இருந்து குதித்தார்
அப்போது அவரிடம் போலீசார் விசாரித்தபோது அவர் தனது பெயரை ராஜூஹரி (வயது 30) என்றும், வடமாநிலத்தை சேர்ந்த அவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்வதாகவும், அவருக்கு திருமணமாகி  ஒரு மகனும், ஒரு மகளும் இருப்பதாகவும் தெரிவித்தார். அவரது தலையில் ஏற்கனவே காயம் ஏற்பட்டு இருந்தது. இதுதொடர்பாக விசாரித்தபோது நேற்று காலையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரெயிலில் வந்தவர், ஈரோடு அருகில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை ரெயில்வே போலீசார் மீட்டு 108 ஆம்புலன்சு மூலமாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற அவர் திடீரென வெளியேறி கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  மேலும் அவரை மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர்.
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமான பகுதியில் வாலிபர் ஒருவர் கட்டிடத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story