குடிநீர் வடிகால் வாரிய பணியாளர் சாவு


குடிநீர் வடிகால் வாரிய பணியாளர் சாவு
x
தினத்தந்தி 5 Nov 2021 7:34 PM IST (Updated: 5 Nov 2021 7:34 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வடிகால் வாரிய பணியாளர் சாவு

பொள்ளாச்சி

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக பணியாளர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் கணவன், மனைவி காயமடைந்தனர்.

ஒப்பந்த பணியாளர்

பொள்ளாச்சி அருகே ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 44). இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தாா். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பக்கோதிபாளையத்தில் இருந்து ஆத்துப்பொள்ளாச்சி செல்வதற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் பொள்ளாச்சி-வால்பாறை ரோடு பக்கோதிபாளையம் பிரிவில் திரும்பும் போது கோபாலகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கோபாலகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன், மனைவி

ஆனைமலை அருகே உள்ள செமனாம்பதியை சேர்ந்தவர் கோபாலன் (வயது 60). இவரது மனைவி ஈஸ்வரி (58). இவர்களது மகன் பிரபு நல்லிகவுண்டன்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளியையொட்டி மகன் வீட்டிற்கு செல்வதற்கு கோபாலனும், ஈஸ்வரியும் மொபட்டில் வந்து கொண்டிருந்தனர்.

மீன்கரை ரோட்டில் நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியில் வந்த போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், கோபாலன் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story