பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு


பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2021 4:54 PM GMT (Updated: 8 Nov 2021 4:54 PM GMT)

பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு தண்ணீர் கூடுதலாக வரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு தண்ணீர் கூடுதலாக வரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றின் வழியாக மொத்தம் 5 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. தற்போது இதன் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை              நடவடிக்கை
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.62 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 972 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து உபரிநீராக கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது அணையின் முழு கொள்ளளவான 105 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றாலும் பருவமழை காரணமாக அணைக்கு அதிகமாக தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு்ள்ளது. அதிகமாக தண்ணீர் வருவதற்கு ஏற்றாற்போல் அணையில் இருந்து கூடுதலாக உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளப்பெருக்கு
பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக் கப்பட்டுள்ளதால், அந்தியூர் அருகே அத்தாணி, ஆப்பக்கூடல், கீழ்வானி, மூங்கில்பட்டு ஆகிய பகுதிகளில் ஓடக்கூடிய பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இருகரைகளையும் தொட்டபடி ஓடுகிறது.
இதனால் பவானி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறையின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பக்கூடல் ஆற்று கரையோர பகுதியில் ஆப்பக்கூடல் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story