பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 9 Nov 2021 10:10 PM IST (Updated: 9 Nov 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரும் குறைக்கப்பட்டது.

நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரும் குறைக்கப்பட்டது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர் பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 
உபரி நீர் திறப்பு குறைப்பு
இந்தநிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பெய்துவந்த கனமழை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதையடுத்து பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5,021 கன அடி தண்ணீர் வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 3,917 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டமும் 103 அடியாக குறைந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியாகவும், பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாகவும் குறைக்கப்பட்டது. பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்றார்போல் உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அணைப்பிரிவு உதவி செயற்பொறியாளர் பாலாஜி தெரிவித்தார்.

---
1 More update

Next Story